சட்டவிரோத குளக் கட்டுமானங்களால் காரைநகர் விவசாயிகள் தவிப்பு! பிரதேச செயலகத்தில் தோழர் ஸ்ரீபவானந்தராஜா பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்!
காரைநகர் பகுதியில் அண்மைக் காலமாக அனுமதி அற்ற, திட்டமிடப்படாத மற்றும் பொருத்தமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள குளக் கட்டுமானங்கள் காரணமாக விவசாயிகள் பல்வேறு கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இத்தகைய திட்டமிடப்படாத கட்டுமானங்களின் விளைவாக, அப்பகுதியின் நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாய நிலங்களில் தேவையற்ற நீர் தேக்கம், நில சேதம் மற்றும் பயிரிடல் நடவடிக்கைகளில் தொடர் இடையூறுகள் ஏற்பட்டு, விவசாயிகள் பொருளாதார ரீதியாகவும் பெரும் நஷ்டங்களைச் சந்தித்து வருகின்றனர்
.
இந்த அவசர நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்து, காரைநகர் விவசாயிகளின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அவற்றுக்கு நிலையான தீர்வுகளை எட்டும் நோக்கில் காரைநகர் பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் தோழர் ஸ்ரீபவானந்தராஜா அவர்கள் நேரடியாகப் பங்கேற்றார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, சட்டவிரோத மற்றும் திட்டமிடப்படாத குளக் கட்டுமானங்கள் தொடர்பாக உரிய ஆய்வுகளை உடனடியாக மேற்கொண்டு, விவசாய நிலங்களையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அவசர மற்றும் நீடித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாய அமைப்புகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த முறையில் கூட்டுத் தீர்வுகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவமும் இங்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
விவசாய உற்பத்தியின் நிலைத்தன்மையையும், விவசாயிகளின் நலனையும் பாதுகாப்பதே தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் உறுதியான நோக்கமாகும் என்றும், அதற்கமைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.



