6 மனிதப் படுகொலை விவகாரம்: ‘இனியபாரதி’ உள்ளிட்ட இருவரை ஜூலை 8 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளர் ‘இனியபாரதி’ எனப்படும் கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகா ஆகியோரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இன்று (02-07-2026) உத்தரவிட்டுள்ளது.
கடந்த காலங்களில் கிடப்பில் போடப்பட்ட வழக்கு: கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி, திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரம் – கோரக்களப்பு வீதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி நீதி கோரி பொலிஸாரில் முறைப்பாடு செய்திருந்த போதிலும், கடந்த கால அரசாங்கங்களினால் இந்த விசாரணை முழுமையாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
2025 இல் புதிய முறைப்பாடு மற்றும் கைது: இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உதயகுமாரின் மனைவி கடந்த 2025ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) மீண்டும் புதிய முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்தார். அதற்கமைய விசாரணைகளை முடுக்கிவிட்ட சி.ஐ.டி.யினர், கடந்த 2025 ஜூலை 6ஆம் திகதி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ‘இனியபாரதி’ என்ற கே. புஷ்பகுமாரைத் திருக்கோவிலும், அவரது சகாவான சசிதரன் தவசீலனை மட்டக்களப்பு – சந்திவெளியிலும் வைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.
வெளிவந்த 6 படுகொலை விபரங்கள்: கைது செய்யப்பட்ட இருவரிடமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கடந்த ஒரு வருட காலமாக சி.ஐ.டி.யினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது, 2005 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிகளை மையமாகக் கொண்டு, தவிசாளர் உதயகுமார் படுகொலை உட்பட 6 கொடூர மனிதப் படுகொலைகளுடன் இவர்களுக்கு நேரடித் தொடர்பிருப்பது அம்பலமானது.
இன்றைய நீதிமன்ற உத்தரவு: இந்நிலையில், ஒரு வருட காலத் தடுப்புக் காவல் விசாரணை முடிவடைந்ததை அடுத்து, சி.ஐ.டி.யினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (02) முன்நகர்வுப் பத்திரம் ஊடாக வழக்கைச் சமர்ப்பித்து இவர்களை ஆஜர்படுத்தினர்.
சந்தேக நபர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டக் காவலில் இருந்து விடுவித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, நீதவான் இவர்களை எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் பலர் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இனியபாரதி மீது குற்றம் சாட்டி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




