பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாதத் திருவிழா கோலாகலமாக ஆரம்பம்!
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க திருத்தலங்களில் ஒன்றான மன்னார் மருதமடு திருத்தலத்தின் ஆடி மாதப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (02) காலை 6:15 மணிக்கு பக்திப் பரவசத்துடன் ஆரம்பமானது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இந்த வருடத்திற்கான திருவிழா மகா கூட்டுத்திருப்பலி (Concelebrated High Mass) ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இவ்விசேட திருப்பலியில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெயமான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு திருத்தலப் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான கத்தோலிக்க மற்றும் பிற மதப் பக்தர்கள் இத்திருவிழா திருப்பலியில் கலந்துகொண்டனர். அத்துடன் பெருமளவிலான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரச திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் எனப் பலரும் அன்னையின் ஆசியைப் பெற்றுக்கொள்ள சமூகமளித்திருந்தனர்.
திருவிழா கூட்டுத்திருப்பலியைத் தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி மடு அன்னையின் மகிமை பொருந்திய திருச்சொரூப பவனி (Statue Procession) திருத்தல வளாகத்தைச் சுற்றி நடைபெற்றது. பவனியைத் தொடர்ந்து திருத்தலத்தின் பிரதான பீடத்தில் வைத்து மடு அன்னையின் விசேட திருச்சொரூப ஆசி (Blessing of the Statue) அலைகடலெனத் திரண்டிருந்த அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டதுடன், திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பாக நிறைவடைந்தன.




