7 அதிகாரிகள் உட்பட 26 பேர் பலி! சிஐடி மற்றும் சிசிடி வசம் ஒப்படைக்கப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை விசாரணை!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக (05 மற்றும் 06 ஆம் திகதிகளில்) இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் 19 கைதிகளும் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர். மேலும், 23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் தொடர்ந்தும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள 18 பேர் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் முற்றாக முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் சிறைச்சாலையிலிருந்த சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நவீன உடல் பரிசோதனை இயந்திரங்களை (Body Scanners) முற்றாக அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகளைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து அவசரமாக ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.
அதேவேளை, வன்முறைக்குக் காரணமான சில முக்கிய கைதிகள் உடனடியாக அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.




