ஆயுதங்களை பறித்து துப்பாக்கிச் சூடு, அதிகாரிகள் மீது கல்வீச்சு! நீர்கொழும்பு சிறை கொடூரத்தின் பின்னணி அம்பலம் – பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அரங்கேறிய கொடூர வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தரும் முழுமையான விபரங்களை பாதுகாப்புப் பிரிவினரும் சிறைச்சாலைத் தரப்பும் வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே, காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இந்த மோதல் ஆரம்பமாகியுள்ளது. சிறையினுள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் மாபியா குழுவினர், அதுகுறித்த ரகசியத் தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கும் ஒற்றர்களான கைதிகளை இலக்கு வைத்தே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த வன்முறையை ‘கடுவெல்லேகம சுரேஷ்’ என்பவரே முழுமையாக வழிநடத்தியுள்ளார்.
இதன்போது, சிறை அதிகாரிகளுக்கு ஒற்றர்களாகச் செயற்பட்ட வர்ணகுலசூரிய நிலங்க துல்ஷான் (29) மற்றும் கணேவத்த ஆரச்சிலாகே கயான் சம்பத் (31) ஆகிய இரு கைதிகளும் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்து கைதிகள் வார்டுகளுக்குள் அடைக்கப்பட்டிருந்த இடைவெளியில், சிறைச்சாலை வைத்தியசாலையை உடைத்த கைதிகள், அங்கிருந்த மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அனைத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
மறுநாள் காலை உணவு வழங்கப்படும் போது இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. சுமார் 100 கைதிகள் ஒன்றுசேர்ந்து எதிர்த்தரப்பைத் தாக்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற முயன்ற பல்லன்சேன சிறைச்சாலையின் புதிய பிரதம ஜெயிலர் மற்றும் சிறை அதிகாரிகள் மீதும் கைதிகள் கற்களைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். சில அதிகாரிகளின் தலைகள் மீது பெரிய கற்களைப் போட்டுத் தாக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர், சிறைச்சாலையின் விரைவு அதிரடிப்படையினர் உள்ளே நுழைந்தபோது, கைதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கொடூரமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மேலும், சிறையின் பாதுகாப்பு அறை மற்றும் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்த கைதிகள், அங்கிருந்த ரீபீட்டர் (Repeater) ரக துப்பாக்கி ஒன்றையும், டி-56 (T-56) ரக துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றி, அதிகாரிகள் மற்றும் எதிர்த்தரப்புக் கைதிகள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் இந்த இரு துப்பாக்கிகளும் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டன.
பாதுகாப்புக் கருதி நீர்கொழும்பு சிறையிலிருந்த 1,033 கைதிகள் அனுராதபுரம், பூஸா, மஹர, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அங்குணகொலபெலஸ்ஸ மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளனர். மோதலை வழிநடத்திய சூத்திரதாரி கடுவெல்லேகம சுரேஷ் பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் கொழும்பு குற்றவியல் (CCD) பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சிஐடிக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஸங்க கரவிட்ட இன்று சிறைக்கு நேரில் சென்று விசாரணைகளைக் கண்காணித்தார். இவற்றுக்கு மேலதிகமாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஆணையாளர் நிமால் ஜி. புஞ்சிஹேவா தலைமையில் முழுமையான விசாரணையை ஆரம்பித்துள்ளது.




