இலங்கையின் கடற்றொழில் துறையில் குளிர்சாதන விநியோகக் கட்டமைப்புத் திறனை (Cold Chain Capacity) மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கத்தினால் 6 அதிநவீன குளிரூட்டப்பட்ட லொறிகள் (Refrigerated Trucks) இன்று (10) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகியோ இசோமாதா (Akio ISOMATA) அவர்களினால், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் (CFC) தலைவர் முகமது நவ்ராஸ் நாசரிடம் இந்த லொறிகள் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே ஆகியோரின் முன்னிலையில் கொழும்பில் நடைபெற்றது.
ஜப்பான் அரசாங்கத்தின் ‘பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின்’ (Economic and Social Development Programme) கீழ், 200 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1.25 மில்லியன் அமெரிக்க டாலர்) முழுமையான மானிய நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இலங்கையின் கடற்றொழில் துறையில் அறுவடைக்கு பிந்தைய இழப்பு (Post-harvest losses) தற்போது 40 சதவீதமாகக் காணப்படுகிறது. விசேடமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கொழும்பு வரையான 300 முதல் 400 கிலோமீட்டர் தூரப் போக்குவரத்தின் போது, முறையான உறைபதன வசதி இல்லாததால் மீன்களின் தரம் குறைந்து, ஏற்றுமதிச் சந்தையில் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. இதற்குத் தீர்வாகவே இந்த லொறிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த விநியோக வலையமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, இத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு மூன்று அதிநவீன ஐஸ் தயாரிக்கும் இயந்திரங்களை (Ice-making machines) வழங்குவதற்கும் ஜப்பான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.




