மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (13) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி 74 வயதுடைய முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தளை கிளையிலிருந்து கொழும்பு நோக்கி லாப் (Laugfs) சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிப் பயணித்த லொறியின் பின் சில்லில் சிக்குண்டே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உக்குவளை பகுதியைச் சேர்ந்த 74 வயது மதிக்கத்தக்க முதியவரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் உக்குவளை பகுதியிலிருந்து மாத்தளையில் அமைந்துள்ள பாலர் பாடசாலை (முன்பள்ளி) ஒன்றிற்குத் தனது பேத்தியை அழைத்துச் சென்ற வேளையிலேயே இப்பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது லொறியில் மோதி தூக்கி எறியப்பட்ட சிறுமி (பேத்தி) பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்துடன் தொடர்புடைய லாப் எரிவாயு லொறியின் சாரதி மாத்தளை பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்படும் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான சாரதி மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.




