சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை: வங்கி கணக்குகள், வாகனப் பதிவுகளுக்கு இனி கட்டாயம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, நாட்டில் சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கமைய நாட்டில் சுமார் 17 மில்லியன் மக்கள் இந்த அடையாள இலக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, புதிய வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், புதிய வணிகங்களை பதிவு செய்தல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளை (Credit Cards) பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு அன்றாட கொடுக்கல் வாங்கல்களுக்கு TIN இலக்கம் இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய சட்டத் திருத்தங்களுக்கு அமைய, TIN இலக்கமானது இனிமேலும் ஒரு தனிநபரின் இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.




