காணாமல் போனோரின் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினையாகக் கருதப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படும்! அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தில் அதிரடி அறிவிப்பு!
காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தற்போதைய அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை (Priority) அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன், யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக (OMP) அதிகாரிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணியாளர்கள் சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதைப் பாராட்டிய அமைச்சர், காணாமல் போனவர்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல என்றும், அவர்களது குடும்பங்கள் நீண்டகால மனவேதனையுடனும் எதிர்பார்ப்புடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். “உடல் காயங்களுக்கு மருந்து வழங்க முடியும். ஆனால் மனக் காயங்களுக்கு உண்மையான மருந்து அன்பும் நீதியும் மட்டுமே. காணாமல் போனோரின் உறவினர்களின் வேதனையை பணத்தால் ஈடுசெய்ய முடியாது” என அமைச்சர் உணர்வுபூர்வமாக வலியுறுத்தினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 2,452 பேர் காணாமல் போயுள்ளதாகப் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் என்றார். ஒரு குடும்பத்தில் இருவர் அல்லது மூவர் வரை காணாமல் போன சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தென் இலங்கையிலும் 1987–1989 காலப்பகுதியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டதாக நினைவூட்டிய அவர், வடக்கும் தெற்கும் ஒரே விதமான துயரத்தையே பகிர்ந்து கொள்கின்றன என்றார்.
தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதுடன், மீள்குடியேறிய மக்களுக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இன வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒரே நாட்டின் மக்களாக வாழக்கூடிய உண்மையான நல்லிணக்கச் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இறுதி இலக்கு என அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் சிவில் சமூக பிரதிநிதிகள் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாகத் தெளிவான விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ஸ்ரீ பவனந்தராஜா, யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலாளர் கே. சிவகரன், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த உட்படப் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



