உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவின் விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
: இந்த ரிட் மனு, இரண்டாவது நாளாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையிலேயே இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தமது வாதங்களை முன்வைத்தார். அதேவேளை, பிரதிவாதிகள் தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் ஆஜராகியிருந்தார்.
இந்த விசேட மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, அதன் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் குழாம், மேலதிக விசாரணைகளை ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.




