வெளிநாட்டுப் பெண்கள் உட்பட நீர்கொழும்பு பெண் கைதிகள் அவசரமாக இடமாற்றம்! பூஸா, அங்குணகொலபெலஸ்ஸ சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் திடீர் மரணம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (08) குறித்த பெண் கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு முறைப்படி மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பெண் கைதிகள் சிலரும் அடங்குவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறை வன்முறையைத் தொடர்ந்து அங்கிருந்த பெண் கைதிகள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அந்தப் போராட்டம் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நீர்கொழும்பு சிறையிலுள்ள ஆண் கைதிகளை ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள வசதிகளை ஆராய்ந்து இடமாற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு இன்னும் சுமார் 1,000 கைதிகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இடமாற்றப்பட்ட கைதிகள் திடீர் மரணம் – பொலிஸ் விசாரணை: இதேவேளை, அங்குணகொலபெலஸ்ஸ, பூஸா மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புக் கருதி அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கும் பூஸா சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டிருந்த இரண்டு கைதிகள், திடீரென ஏற்பட்ட நோய் நிலைமைகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையிலும் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
குறித்த மூன்று மரணங்கள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல்கள் வழங்கப்பட்டு, விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



