சமூக வலைதளங்களில் பகிர்ந்த சொல்லிசைப் (Rap) பாடல் ஒன்றின் மூலம் மத உணர்வுகளைத் தூண்டியதாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த பிரபல சொல்லிசைப் பாடகர் சங்கீத்சன், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (12) வெள்ளிக்கிழமை சற்றுமுன்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி – நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமொன்றில் நடைபெற்ற இசை நிகழ்வில் பாடப்பட்ட பாடலொன்றைத் தனது விசேட இசைச் சேர்க்கையுடன் சொல்லிசைப் பாடலாக மாற்றி, அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், கடந்த ஜூன் 2ஆம் திகதி இவரைக் கைது செய்தனர்.
மறுநாள் (ஜூன் 03) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பாடகரை, எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இளைஞனின் இந்த அநியாயக் கைதுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வடக்கின் பல பகுதிகளில் மாபெரும் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். அத்துடன், கொழும்பு உச்ச நீதிமன்றத்தில் அவசர அடிப்படை உரிமை மீறல் (FR) வழக்கும், நேற்று (11) வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் அவசரப் பிணை மறுசீரமைப்பு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டன.




