களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில், 20 கிலோமீட்டர் நீளமுடைய 12 முக்கிய வீதிகளைப் புனரமைக்கும் விசேட வீதி அபிவிருத்தித் திட்டம் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் 7 வீதிகளும், கொழும்பு மாவட்டத்தில் 5 வீதிகளுமாக மொத்தம் 12 வீதிகள் இத்திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்படவுள்ளன.
இதற்காக மொத்தமாக 692 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன்கீழ் பண்டாரகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ரேருகன சமரநாயக்க வீதி (1.22 கி.மீ) மற்றும் கனத்தகொட வீதி (2.36 கி.மீ) ஆகியவற்றின் புனரமைப்புப் பணிகள் இன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
உள்ளடக்கப்படும் ஏனைய வீதிகள்: களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, புலத்சிங்கள, களுத்துறை ஆகிய பகுதிகளில் கும்புக நாரங்கஹஹேன வீதி, ரணவிரு சமந்த மாவத்தை, எடகந்த வீதி, காலாஹேன சந்தி முதல் மீரஷேன தொழிற்சாலை வரையிலான வீதி, கோனதூவ கவட்டயாகொட திக்வெல்ல வீதி ஆகிய 5 வீதிகளும், கொழும்பு மாவட்டத்தின் ஹோமாகம மற்றும் பாடுக்கை பகுதிகளில் முனமலே வீதி, கஹவல நாகந்தல வீதி, போபே வெவல்கெட்டிய மாஹிங்கல வீதி, தம்பே பைகேவத்தை வீதி, போபேவத்தை வீதி ஆகிய 5 வீதிகளும் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.
இந்த பாரிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் அனைத்துப் பணிகளும் வரும் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05 ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




