பெண் பிசியோதெரபிஸ்ட் கொலை விவகாரம்: ‘விக்’ அணிந்து பெண்களை ஏமாற்றிய 3 பிள்ளைகளின் தந்தை! சந்தேகநபரைப் பிடிக்கப் பொதுமக்களின் உதவியைக் கோருகிறது பொலிஸ்!
அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் பௌதீக சிகிச்சை நிபுணர் (பிசியோதெரபிஸ்ட்) கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து, தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேகநபரை கண்டறிவதற்காகப் பொலிஸார் தற்போது பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி பிற்பகல் வேளையில், தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிற்குள் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அவர் அம்பாறை வைத்தியசாலையில் பணிபுரிந்த பௌதீக சிகிச்சை நிபுணர் என்பது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் எனக் கூறப்படும் இந்தச் சந்தேகநபர், குறித்த யுவதிக்கு முன்னால் ‘தினேத் திஸாநாயக்க’ என்ற போலிப் பெயரிலேயே பழகி வந்துள்ளார். எனினும், அவரது தேசிய அடையாள அட்டையின்படி அவரது உண்மையான பெயர் ‘ஜயசுந்தர முதியான்சேலாகே சம்பிக ஸ்ரியான் ஜயசுந்தர’ என்பதும், அவர் நாரம்மல பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான இவர், போலி தலைமுடி (Wig) அணிந்து தனது உண்மையான தோற்றத்தை மறைத்து வாழ்ந்து வந்துள்ளதுடன், பல யுவதிகளுடன் காதலில் ஈடுபட்டு ஏமாற்றி வந்துள்ளார்.
சந்தேகநபருக்கு எதிராகக் கம்பஹா, புதுக்கடை, திஸ்ஸமஹாராமய உள்ளிட்ட நீதவான் நீதிமன்றங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அத்துடன், பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்தமை தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கும் (CID) இவருக்கு எதிராகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த நிலையில், இந்தச் சந்தேகநபரின் இவ்வாறான குற்றச் செயல்களுக்கு அவரது மனைவியும் ஆதரவளித்து, பின்னணியில் உதவிகளை வழங்கியிருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள், சந்தேகநபர் குறித்த யுவதியின் உடலை நுவரெலியா பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் இருந்து இரகசியமாக வெளியே கொண்டு வரும் அதிதிடுக்கிடும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கமெராவில் பதிவாகியிருந்தது. இவரைக் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



