மகாஓயா தேசிய பூங்காவிற்குள் காட்டு யானைகளுக்கு உணவளித்த இருவருக்குத் தலா 40,000 ரூபாய் அபராதம்! தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
மகாஓயா தேசிய பூங்காவிற்குள் காட்டு யானைகளுக்கு உணவளித்த குற்றத்திற்காக இரண்டு நபர்களுக்கு தலா 40,000 ரூபாய் வீதம் மொத்தம் 80,000 ரூபாய் அபராதம் விதித்து தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில், பொழுதுபோக்கு நோக்கத்துக்காக இரண்டு யானைக் குட்டிகள் உட்பட பல காட்டு யானைகளுக்குச் சிலர் பல்வேறு உணவுப் பொருட்களை வழங்கியிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளால் முறையான விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹெனனிகல பூங்கா நுழைவாயில் அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்தனர்.
இந்த விசாரணையின் அடிப்படையில், வனவிலங்கு அதிகாரிகள் ஐந்து நபர்களைக் குற்றவாளிகளாக அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகக் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி தெஹியத்தக்கண்டிய நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
இவ்வழக்கை நீண்ட விசாரணைக்குட்படுத்திய நீதிமன்றம், கடந்த வியாழக்கிழமை (18) குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் மீதான குற்றத்தை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு மொத்தம் 80,000 ரூபாய் (தலா 40,000 ரூபாய்) அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது.
காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் இயற்கையான குணங்களை மாற்றுவதுடன் ஆபத்துக்களையும் விளைவிக்கும் என்பதால், பொதுமக்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என வனவிலங்கு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




