பரீட்சை நடைமுறைகளில் அதிரடி டிஜிட்டல் புரட்சி! திணைக்களம் முழுவதும் விரிவான கணினி வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அதிரடி அனுமதி!
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் செயல்பாடுகளை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தி, பரீட்சை நடைமுறைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான விரிவான கணினி வலையமைப்பொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய மட்டத்திலான 300-க்கும் மேற்பட்ட பரீட்சைகளை வருடாந்தம் நடத்தும் முக்கிய பொறுப்பை இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. எனினும், தற்போது திணைக்களத்தின் ஒவ்வொரு பிரிவும் தனித்தனியான கணினி அமைப்புகளைக் கொண்டு இயங்குவதால், அவற்றுக்கிடையே தரவுகளைப் பரிமாற்றுவதில் தேவையற்ற தாமதங்களும், வள வீணாக்கலும் ஏற்பட்டு வருகின்றன.
இந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து, திணைக்களத்தின் சேவைகளை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்காக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் கீழ், பரீட்சைத் திணைக்களத்தின் அனைத்துக் கிளைகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் இணைக்கும் வகையில் விரிவான கணினி வலையமைப்பொன்று (Comprehensive Computer Network) நிறுவப்படவுள்ளது.
இந்த புதிய கணினி வலையமைப்பு உருவாக்கப்படுவதன் மூலம், பரீட்சை தொடர்பான அனைத்துச் சேவைகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விரைவான மற்றும் நம்பகத்தன்மை மிக்க சேவைகளை வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.



