பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராமேந்திர சோழீஸ்வரர் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையையொட்டி நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் கம்பவாரிதி ஜெயராஜ் கலந்துகொண்டு விசேட உரையாற்றினார்.
அங்கு அவர் பேசுகையில், சைவ சமயத்திற்கு நிகரான சமயம் நம் நாட்டிலோ, அல்லது உலகிலேயே வேறு எங்குமே இல்லை என்று குறிப்பிட்டார். சைவ சமயத்தின் மாண்புகளை வார்த்தைகளால் விவரித்து கூறமுடியாது என்றும், அத்தகைய செறிவான சமயம் சைவம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கம்பவாரிதி ஜெயராஜின் முக்கிய கருத்துக்கள்:
இணையுங்கள் →Elanka Mirror WhatsApp சேனலில் இணையுங்கள்உடனுக்குடன் செய்திகளைப் பெற வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
- குழந்தைகளுக்கான விழிப்புணர்வு: நமது குழந்தைகளுக்கு நமது சமயத்தின் பெருமையை இளமைப்பருவம் முதலே அறியச் செய்ய வேண்டும்.
- வீடுகளில் இருக்க வேண்டிய நூல்கள்: தமிழர்கள் மற்றும் சைவர்களின் வீடுகளில் திருவாசகமும், திருக்குறளும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
- கோயில்களின் முக்கியத்துவம்: கோயில்கள் கட்டுவதும், குடமுழுக்கு நடத்துவதும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியில் ஒரு கூறாகும். நமது சந்ததிக்கு நமது சமயத்தின் பெருமையை உணர்த்த சிறப்பு சொற்பொழிவுகள் நடத்தப்பட வேண்டும்.
இந்நிகழ்வுக்கு ஊர் முக்கியஸ்தர் பெசலாந்தேவர் தலைமைவகித்தார். தொழிலதிபர் அ.ப. ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வை தமிழ்ச் செம்மல் விருதாளர் நெ.ரா. சந்திரன் ஒருங்கிணைத்திருந்தார்.
மேலும், தொழிலதிபர் அ.ப. மணிகண்டன், விழாக்குழு நிர்வாகிகள் அரு.வே. மாணிக்கவேலு, சதீஷ்குமார், மணிகண்டன், சுவாமிநாதன், லெட்சுமணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றதுடன், பெரியாளர் எஸ். பழனியப்பன் நன்றியுரை ஆற்றினார்.

