பேரிடர்களின் போது இலங்கையர்களாக, நாம் அனைவரும் ஒன்றாக இணைவதைப் போல் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) அண்மையில் நடைபெற்ற தேசிய சமாதான பேரவையின் 2026 வருடாந்த சர்வமத மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மைய ஐந்து வருட காலத்திற்குள் பல்வேறு சோகச் சம்பவங்களை எதிர்கொண்ட நமது நாட்டு மக்களுக்கு, இப்போது மத்திய கிழக்கு யுத்தத்தின் தாக்கத்தாலும் புதிய பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை வலுப்படுத்த வேண்டிய தருணம் எம்முன்னால் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
“அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக சமூகத்தை வலுப்படுத்துவதோடு மட்டும் நின்று விடாது, சமூகத்தில் உருவாகும் சிக்கலான நிலைமைகளை தீர்க்க மனித இனம் கைக்கொண்ட உயர்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைகள் தொடர்பில் மக்களை அறிவூட்ட வேண்டும். சமாதானமாகவும் ஐக்கியத்துடனும் புரிதலுடனும் நடந்து கொள்வது குறித்து மக்களை வலுப்படுத்த வேண்டும்.”
மேலும், 9 மாகாணங்கள் மற்றும் 25 மாவட்டங்களிலும் வாழும் பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த மக்கள் நட்புறவையும், சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் முன்னிலைப்படுத்தி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சமத்துவமான கட்டமைப்பு: நமது நாட்டின் அரசியலமைப்பின் உச்ச சட்டத்தில் நாம் அனைவரும் சமத்துவமானவர்கள் என குறிப்பிடப்படும்போது, அதனை நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். ஒவ்வொரு குடிமகனையும் சமத்துவமாக நடத்தி, பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு மதங்களை விசுவாசம் கொள்ளும் அனைவருக்கும் உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுக்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எந்தக் கொள்கையையோ அல்லது கருத்தையோ நாம் கொண்டிருந்தாலும், பேரிடர்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கையர்களாக ஒன்றிணைவதைப் போல் நாட்டிற்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும் என அவர் தனது உரையில் இறுதியாக வலியுறுத்தினார்.




