ஜா-எல: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘பட்டுவத்தே சாமர’ என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான நீண்டகாலப் பகை அல்லது பழிவாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிய சந்தேக நபர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

