புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காகப் பயன்படுத்தப்படாத அரச காணிகளை விடுவிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துங்கள்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவுறுத்தல்!
அரச காணிகள் கட்டளைச் சட்டம் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றிற்கு அமைவாக, தற்காலத்திற்குப் பொருத்தமற்ற சுற்றறிக்கைகளை ரத்து செய்வதற்கும், திருத்தப்பட வேண்டிய சுற்றறிக்கைகளைத் திருத்துவதற்கும் நியமிக்கப்பட்ட சுற்றறிக்கை திருத்தக் குழுவுடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளார்.
அமைச்சரவைக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட இவ்விசேட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட புதிய முன்மொழிவுகள் குறித்து இச்சந்திப்பின் போது மிகவும் விரிவாகக் ஆராயப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதியளவு பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் அரச காணிகளைப் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக விடுவிக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். அவ்வாறான திட்டங்களைத் துரிதப்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை உடனடியாக அடைந்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரச காணிகள் வீணாகப் போதியளவு பயன்படுத்தப்படாமல் இருப்பதைத் தவிர்த்து, தற்காலத்திற்கு ஏற்றவாறு அவற்றை செயற்திறன் மிக்க வகையில் முறையான முதலீடுகளுக்குப் பயன்படுத்துவதற்கும், அதற்கமைவான புதிய காணி கொள்கையொன்று (New Land Policy) விரைவாக வகுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.




