சாதாரண தரப் பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் சாதனை! 70.1% மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி: தேசிய மட்டத் தரவரிசையிலும் அதிரடி முன்னேற்றம்!
நடைபெற்று முடிந்த 2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், வடக்கு மாகாண மாணவர்கள் இம்முறை கல்விப் புலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றப் பதிவை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, வடக்கு மாகாணத்திலிருந்து இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் (A/L) கற்பதற்கான தகுதியைப் பெற்று மாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன், இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் மட்டும் 566 மாணவர்கள் அனைத்து 9 பாடங்களிலும் ‘ஏ’ (A) சித்தியைப் பெற்று மிகச்சிறந்த சாதனை அடைவை எய்தியுள்ளனர்.
அகில இலங்கை ரீதியிலான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணமானது தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றமடைந்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணம் 69.87 சதவீதத் தேர்ச்சியுடன் தேசிய மட்டத்தில் 9ஆம் இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுத் தரவுகளுடன் ஒப்பிடுகையில், இம்முறை மாணவர்களின் உயர்தரத்திற்கான தேர்ச்சி வீதத்திலும் சரி, தேசிய மட்டத் தரவரிசையிலும் சரி, வடக்கு மாகாணம் மிகத் தெளிவானதொரு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இருப்பினும், இந்த ஒட்டுமொத்த மகிழ்ச்சியான முன்னேற்றங்களுக்கு மத்தியிலும், வட மாகாணத்தில் இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர் என்ற கவலையளிக்கும் விபரமும் மாகாணக் கல்வித் தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.



