ஹரக் கட்டாவை தப்பவைக்க 50 கோடி இலஞ்ச டீல்! முன்னாள் அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித மற்றும் சஜப அமைப்பாளர் சரித் அபேசிங்க அதிரடிக் கைது!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுக்கான பின்னணி: நாட்டின் பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த ஹரக் கட்டாவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், அவரது தடுப்புக் காவல் உத்தரவை நீக்கி பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையைத் தவிர வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும், விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்கும் தேவையான உதவிகளை வழங்குவதாக இவர்கள் உறுதியளித்துள்ளனர்.
துபாயில் நடந்த 50 கோடி டீல்: இதற்காக, கடந்த 2023 ஆம் ஆண்டு துபாயில் வைத்து ஹரக் கட்டாவின் மனைவியான மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் இவர்கள் ஆரம்பத்தில் 50 கோடி ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளனர். பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டு, அதில் முன்பணமாக 12 கோடி ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட விபரங்கள்: முன்னாள் நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்படும் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராகச் செயற்பட்ட வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இந்த விவகாரம் இலங்கையின் அரசியல் மற்றும் சட்டத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.




