நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவிக்கு சவால்! மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்தது!
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைச் செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதி விசாரணைக்காக அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘அபினவ நிவஹல் பெரமுன’வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விசேட மனு, நேற்றைய தினம் (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக் பரன், இந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் அருகாமையிலான ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். அதேவேளை, எதிர்மனுதாரரான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்னவும் இந்தக் கோரிக்கைக்குத் தனது தரப்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இருதரப்பு இணக்கப்பாட்டை அடுத்து, குறித்த மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் ஒகஸ்ட் 31ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளுமாறு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்க வைத்தியராகப் பணியாற்றிய ஒருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவது நாட்டின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதுடன், அது நாடாளுமன்றப் பதவி வகிப்பதற்கான ஒரு தகைமையீனமாகும் என மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



