தேசிய மக்கள் சக்தியின் இலக்கு! யாழ்ப்பாணத்தில் “சமூகசக்தி” வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பம்!
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஆட்சியின் முக்கிய இலக்குகளில் ஒன்றான வறுமை ஒழிப்பை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், “சமூகசக்தி” தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட முன்மொழிவுகளுக்கான அனுமதி மற்றும் செயலாக்கம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேரடியாகப் பங்கேற்று, சமூகசக்தி தலைவர்கள் மற்றும் கிராம சேவகர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராம மட்டங்களில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம், அவற்றுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகள் மற்றும் செயலாக்கத்தில் அதிகாரிகள் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டன. அதேவேளை, யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவுபடுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் பற்றியும் விரிவான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
வறுமையை ஒழித்து மக்களைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்தும் இந்த “சமூகசக்தி” வேலைத்திட்டங்கள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். அதற்காக அரச அதிகாரிகள், சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் மாற்றத்தை அடிப்படையிலிருந்து உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும். அதனை நோக்கி சமூகசக்தி வேலைத்திட்டம் ஊர்மட்டத்தில் உறுதியான முன்னேற்றத்தை உருவாக்கி வருவதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.




