திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிக்கின்றது! நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திருத்தத்திற்கு சஜித் பிரேமதாச கடும் எதிர்ப்பு!
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொது மக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனச் சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.
தற்போது அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும் அதிகரிக்க முயற்சித்து வருகின்றது. எனினும் இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் தலா 8 நீதியரசர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என அவர் கவலை வெளியிட்டார்.
இவ்வாறான திடீர் அரசியலமைப்புத் திருத்தங்கள் ஜனநாயக முறைமைக்கு மரண அடியையே கொடுக்கின்றன எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்குச் சவால் விடுக்கப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பல சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் எழுப்பி நிற்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
20 ஆவது திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
நீதியரசர்களுக்கு தேவைப்பாடு நிலவினால் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் தயாராக இருந்த போதிலும், இவ்வாறான முறையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் வலியுறுத்தினார்.
நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீதிமன்றத்திற்கான வசதிகளை பெற்றுக் கொடுப்பதாக அமைந்தாலும், இவ்வாறு ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதிமன்றத்தின் நற்பெயரையும் பிம்பத்தையும் கெடுக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.



