பணம் தூய்தாக்கல் தடுப்பு திருத்தச் சட்டமூலம் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்! நிதிசார் கொடுக்கல்வாங்கல் மற்றும் பயங்கரவாத நிதியழிப்பு ஒடுக்குதல் சட்டமூலங்களும் பாஸ்!
நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை சர்வதேசத் தரங்களுக்கு இணங்க மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 3 முக்கிய திருத்தச் சட்டமூலங்கள் இன்று (09) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
பணம் தூய்தாக்கல் தடுப்புச் சட்டமூலம் (2/3 பெரும்பான்மை): பணம் தூய்தாக்கல் தடுப்பு (திருத்தச்) சட்டமூலம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய (14வது பிரிவு), நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் (மூன்றில் இரண்டு பங்கு) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
வாக்கெடுப்பின்றி நிறைவேறிய ஏனைய இரு சட்டமூலங்கள்: இதேவேளை, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பயங்கரவாதிகளுக்கான நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டும் எவ்வித வாக்கெடுப்பும் இன்றி ஏகமனதாகப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்: இந்த புதிய திருத்தச் சட்டமூலங்களின் ஊடாக பணம் தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்கான தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பை சர்வதேசத் தரங்களுக்கு இணங்க மேலும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அத்துடன், நாட்டின் நிதிக் கட்டமைப்பின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நிதிப் பரிவர்த்தனைகள் மீதான ஒழுங்குமுறைச் செயல்முறைகளை மிகவும் திறமையானதாக்கவும் இந்தச் சட்டங்கள் வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




