‘திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னிலையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!
‘திட்வா’ சூறாவளி மற்றும் அண்மைய வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் விசேட நிகழ்வொன்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது.
‘ONE Tata Sri Lanka Cyclone Ditwah and Floods Response Programme’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் இந்த உதவி வழங்கும் திட்டம் கொழும்பில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சீரற்ற வானிலையால் வாழ்வாதாரங்களை இழந்து, கல்விப் பொதுச் சாதனங்களை இழந்த மாணவர்களின் கல்வித் தேவைகளைத் தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “எத்தகைய இயற்கை பேரிடர் காலங்களிலும் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை நாம் அனைவரும் இணைந்து உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார். அத்துடன், பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காகவும், மக்களுக்கு உதவுவதற்காகவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் முன்வந்த டாட்டா (Tata) நிறுவனத்திற்கும் பிரதமர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்.
டாட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உபகரணப் பொதிகள் நேரடியாகப் பிரதமரால் கையளிக்கப்பட்டன.




