சாவகச்சேரியில் புதிய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி, நேற்று (14) பிற்பகல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கான (HQI) இந்த உத்தியோகபூர்வ விடுதியானது, சாவகச்சேரி கச்சாய் வீதியில் அமைந்துள்ள பொலிஸ் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பொலிஸ்மா அதிபர் (IGP), வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய கட்டடத்தினை நாடா வெட்டித் திறந்து வைத்த அமைச்சர், அதன்பின்னர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.




