முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா இன்று திங்கட்கிழமை (15) காலை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார்.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தற்போது மிக இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நிதி மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே, வாக்குமூலம் (Statement) வழங்குவதற்காக அவர் இன்று காலை உத்தியோகபூர்வமாக அங்கு வருகை தந்துள்ளார்.
அவரிடம் கடந்த கால திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் பல மணிநேரம் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடப் புலனாய்வுப் பிரிவினர் தற்காலிகமாக மறுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் நகர்வுகளின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய விஜித் விஜயமுனி சொய்சா, தற்போது நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



