திலித் ஜயவீர, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை: குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை!
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இன்று திங்கட்கிழமை (15) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, பின்வரும் 6 நபர்களுக்கு எதிராக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது:
- பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில
- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன
- சுகீஸ்வர பண்டார
- மஹிந்த பத்திரண
இந்த விசாரணைகள் தொடர்பில், சம்பந்தப்பட்ட 6 நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு அவசர அறிவித்தல் (Notice) விடுக்க வேண்டும் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் பலத்த கோரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும், சி.ஐ.டி.யினரின் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான், இந்த விடயம் தொடர்பாகக் குறிப்பிட்ட நபர்களை இந்த ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போதே நீதவான் நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்களை விடுக்க வேண்டிய அவசியம் தற்சமயம் இல்லை எனத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்த வழக்கு அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



