அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அத்திணைக்களம், இந்த விண்ணப்பங்களை நேற்று (22) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி வரை இணையவழி (Online) முறை மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இப்பரீட்சைக்கு விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் (Private Candidates) விண்ணப்பிக்க முடியாது என்றும், அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது அதிபர் அல்லது பாடசாலைத் தலைவர்கள் ஊடாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, அதிபர்கள் அல்லது தனியார் பாடசாலைத் தலைவர்கள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றுள் ஒன்றிற்குள் பிரவேசித்து, உரிய அறிவுறுத்தல்களைத் தெளிவாகப் படித்துப் பார்த்து, துல்லியமாக ஆன்லைன் முறை ஊடாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் மற்றும் அறிவுறுத்தல்கள்:
- 2026 ஆம் ஆண்டில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்று, 2027 ஆம் ஆண்டில் முதன்முறையாக உயர்தரப் (A/L) பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே இப்பரீட்சைக்குச் சமர்ப்பிக்க முடியும்.
- பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொற்களைப் (Password) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களை அனுப்பிய பின்னர், அதன் அச்சிடப்பட்ட பிரதியொன்றை (Printout) எடுத்து, தேவையான போது சமர்ப்பிப்பதற்காகத் தங்களது பாதுகாப்பில் வைத்திருக்குமாறு அதிபர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- தனியார் பாடசாலை மாணவர்களின் அனைத்து விபரங்களும் தரவு அமைப்பில் (Data system) உள்ளிடப்பட்ட பின்னரே அதற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். கட்டணங்களைச் செலுத்திய பின்னர் மீண்டும் புதிய மாணவர்களை உள்ளடக்க முடியாது.
இது தொடர்பாக ஏதேனும் வினவல்களை மேற்கொள்ள வேண்டியிருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் அல்லது 011 2784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது




