மதவாச்சி – தலைமன்னார் இடையே புகையிரதச் சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் இன்று மதியம் வெற்றி! 6 மாதங்களின் பின் விரைவில் கொழும்புக்கான சேவை ஆரம்பம்!
மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரதச் சேவையை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட பரீட்சார்த்த ஓட்ட நடவடிக்கை இன்று (19) மதியம் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைமன்னாரிலிருந்து கொழும்புக்கான நேரடி புகையிரதச் சேவைகள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடுமையான புயல் காரணமாக தலைமன்னாரிலிருந்து கொழும்புக்குச் செல்லும் புகையிரதப் பாதையில் பாரிய சேதங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறித்த வழித்தடப் புகையிரதச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட புகையிரதப் பாதைகளை முழுமையாகப் புனரமைக்கும் பணிகளை இலங்கை புகையிரத திணைக்களம் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்தது. தற்போது புனரமைப்புப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதை அடுத்து, தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையிலான புகையிரதச் சேவைகளை மீண்டும் வழமைப்போல் முன்னெடுக்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதற்கு அமைவாகவே, இன்று மதியம் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை புகையிரதச் சேவையின் விசேட பரீட்சார்த்த ஓட்ட நடவடிக்கை (Trial Run) வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது. இந்தப் பரீட்சார்த்த நடவடிக்கை தங்கு தடையின்றி நிறைவடைந்துள்ளதால், மிக விரைவில் தலைமன்னாரிலிருந்து கொழும்புக்கான தினசரி புகையிரதச் சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பானது வட பகுதி மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




