மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது! சிஐடி வசம் ஒப்படைப்பு!
சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த, இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழுவின் முக்கிய துப்பாக்கிதாரியான “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் கைது – நாடு கடத்தப்பட்டார்: தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுவின் முன்னணி உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்ட இவரை மலேசியா பாதுகாப்புப் பிரிவினர் அந்நாட்டில் வைத்து அண்மையில் கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றிரவு (25) அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
42 வயதான குறித்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் விரிவான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா நீதிமன்றச் சுட்டுக்கொலை விவகாரம்: கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, ‘பஸ்பொட்டா’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகியவை இவர் மீதான பிரதான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




