IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றம்! ஜனாதிபதி அநுரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.
இதன்போது, இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் நாட்டின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் வெகுவாகப் பாராட்டினர். அண்மைக்கால பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.
தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை மிக அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகத் தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டினர். அத்துடன், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்தனர்.
ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 07 ஆவது மீளாய்வின் போது, இலங்கையின் திட்டச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்தனர்.



