போலி பொலிஸ் அதிகாரிகளின் பெயரில் ஆன்லைன் பண மோசடி! முறைப்பாடளிக்க விசேட எண்களை அறிமுகப்படுத்தியது பொலிஸ்!
பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காகப் பொலிஸார் சில விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மீண்டும் மீண்டும் ஏமாறும் பொதுமக்கள்: இந்த மோசடிகள் தொடர்பில் இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட்டிருந்த போதிலும், மக்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறான மோசடிகளில் சிக்குவது அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலி வாட்ஸ்அப், டெலிகிராம் கணக்குகள்: கணினிகள் அல்லது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைக் கொண்ட போலியாகத் தயாரிக்கப்பட்ட வட்ஸ்அப் (WhatsApp) மற்றும் டெலிகிராம் (Telegram) கணக்குகள் ஊடாகவே இந்த மோசடிகள் தீவிரமாகச் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரின் தெளிவுபடுத்தலும் தொடர்பு இலக்கங்களும்: பொலிஸார் எந்தவொரு விசாரணைக்காகவும் பொதுமக்களிடமிருந்து பணத்தை அறவிடுவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள அதிகாரிகள், இவ்வாறான மோசடி நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு அதிகாரிகளின் 071 859 2918, 071 859 1765 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 0112 300 756 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ இது தொடர்பான முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


