க.பொ.த உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய ரிட் மனு நிராகரிப்பு! மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரப்) பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு தொடர்பில் விரிவாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினாலேயே இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பரீட்சையை இரண்டு மாதங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர்கள் இந்த மனுவைச் சமர்ப்பித்திருந்தனர்.
எனினும், மனு தொடர்பான கருத்துரைகள் மற்றும் விடயங்களை விரிவாக ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, திட்டமிட்டபடி எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

