வெனிசுலாவில் இன்று (25) ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலான மக்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு (Caracas) அருகில் இன்று இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இதன் தாக்கம் அண்டை நாடான கொலம்பியாவிலும் கடுமையாக உணரப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, மொண்டல்பான் பகுதியிலிருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக முதலாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டு வெனிசுலாவை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்த இரு நிலநடுக்கங்கள் காரணமாகத் தலைநகர் கராகஸில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கட்டிடங்கள் குலுங்கியதால் வீதிகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்தபடி வெட்டவெளிகளை நோக்கி ஓடி தப்பியதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை தெரிவிக்கிறது.
இந்த பாரிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து வெனிசுலா கடற்கரை பகுதிகள் மற்றும் அதற்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளுக்குப் (Caribbean Islands) பயங்கர சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்புப் படையினர் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.



