இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தற்போது கடுமையான “நிதி நெருக்கடியை” எதிர்கொண்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அந்த நிறுவனம் இன்று (19) விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் அண்மையில் நியமிக்கப்பட்ட “கிரிக்கெட் மாற்றக் குழு” (Cricket Transformation Committee) தொடர்பிலான பின்னணிகளைக் குறிப்பிட்டு, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நிதி ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகச் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை என SLC சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாட்டின் மிக ஸ்திரமான விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாகத் தொடர்ந்து விளங்குவதாகவும், திட்டமிட்டபடி அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் அபிவிருத்தி நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் இவ்வாறான போலியான பிரசாரங்களை நம்ப வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.



