2018/2019 காலப்பகுதியில் சிறையிலிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் ‘பிள்ளையான்’ என்பவரைத் தான் சந்திக்கச் சென்றமை எந்த வகையிலும் இரகசியமான ஒன்றல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை முன்னேற்றம் குறித்து இன்று (20) நீதிமன்றத்தில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததற்குப் பதிலளிக்கும் வகையில் தனது ‘X’ கணக்கில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்துள்ளதாக இன்று (20) தெரிவித்திருந்தார்.
இது குறித்துப் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, அந்த காலகட்டத்தில் பிள்ளையான் தங்களது கூட்டணியின் பங்காளியாக இருந்ததால் அவரைப் பார்க்கச் சென்றதாகவும், இதற்கான சிறைச்சாலை வருகை அறிக்கைகள் இப்போதும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பை உறுதிப்படுத்துவதற்காக CID அதிகாரிகள் பிரான்ஸ் வரை சென்று விசாரித்திருப்பது பொதுப் பணத்தை வீணடிக்கும் செயல் என அவர் சாடியுள்ளார். பிள்ளையான் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இந்தத் துயரத்தை அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதற்காகப் பயன்படுத்துகிறது எனக் குற்றம் சாட்டியுள்ள நாமல், எந்தவொரு வெளிப்படையான விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும், தமக்கு எதிராக ஊடக நாடகங்களை நடத்துவதை விடுத்து நாட்டு மக்களுக்கான அர்த்தமுள்ள முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




