யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை சட்ட வைத்திய அதிகாரியின் (JMO) அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதன்போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் காவல்துறையினரும் சாட்சியமளித்தனர்.
- விரிவுரையாளரின் இறப்புக்குக் காரணம் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மகள் மற்றும் மருமகன் ஆகிய இருவர் மீதும் பலத்த சந்தேகம் நிலவுவதாக காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
- இருதரப்பு மரண விசாரணைகளைத் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், சந்தேகநபர்களான மகள் மற்றும் மருமகனின் விளக்கமறியல் காலத்தை அன்றைய தினம் வரை நீடித்து உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையானார். முதலாவது சந்தேகநபரான மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியதுடன், இரண்டாவது சந்தேகநபரான மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




