பேராதனை போதனா வைத்தியசாலையில் ரூ. 92 மில்லியன் செலவில் புதிய அவசர சிகிச்சை மற்றும் நவீன ஆய்வகப் பிரிவுகள் இன்று திறப்பு!
மருத்துவ மற்றும் துணை மருத்துவ மாணவர்களுக்கான முதன்மை மருத்துவப் பயிற்சி மையமாக விளங்கும் பேராதனை போதனா வைத்தியசாலையின் பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்தி, மக்களுக்கு உயர்தர உன்னத சேவையை வழங்கும் நோக்கில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, புனரமைக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு மற்றும் புதிய முதன்மை மருத்துவ ஆய்வகம் என்பன இன்று (14) மக்கள் பயன்பாட்டிற்கு உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
இதுவரை காலமும் இருந்த குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகளைப் பலமடங்கு அதிகரிக்கும் நோக்கில், இப்பிரிவு 92 மில்லியன் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், வைத்தியசாலைக்கு வருகை தரும் பெருமளவிலான நோயாளர்களுக்கு விரைவாகவும் திறம்படவும் அவசர சிகிச்சை அளிப்பதற்காக, இங்குள்ள மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை காலமும் எவ்வித பயன்பாடும் இன்றி கைவிடப்பட்டிருந்த ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பயிற்சிப் பள்ளி கட்டடமானது சுகாதார அமைச்சினால் முழுமையாகப் பொறுப்பேற்கப்பட்டு, அது நவீன முறையில் புனரமைக்கப்பட்டு இந்த புதிய ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளை மிக விரைவாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள முடியும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




