லுனுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவரது சடலம் நேற்று (01) மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அங்குனுகொலபெலஸ்ஸ மீன்பிடி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி காலை 9.00 மணியளவில் குறித்த நீர்த்தேக்கத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்கள், அவர்கள் பயணித்த படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயினர். இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மத்தியில், நேற்று அப்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மற்றொரு மீனவர் நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு அதனைப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் திஸ்ஸமஹாராமவிலுள்ள தெபரவெவ ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, நீரில் மூழ்கியமையே மரணத்திற்கான காரணம் என்பது மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், காணாமல்போன மற்றைய மீனவரைக் கண்டறியும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்


