நயினாதீவில் வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்திர பெருந்திருவிழா, இன்றைய தினம் (15) திங்கட்கிழமை காலை சுபமுகூர்த்த வேளையில் கொடியேற்றத்துடன் பக்திப்பரவசமாக ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து 15 தினங்களுக்கு அம்மனின் மகோற்சவத் திருவிழாக்கள் மிக விமரிசையாக இடம்பெறவுள்ளன. இதன் முக்கிய நிகழ்வான ரதோற்சவம் (தேர்த் திருவிழா) எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையும், அதற்கு மறுநாள் ஜூன் 29ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன. அன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவத் திருவிழாக்கள் நிறைவுபெறவுள்ளன.
மகோற்சவ காலப்பகுதியில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஆலய சூழலிலும் கடற்பயணப் பாதைகளிலும் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களுக்கான அவசர உதவிகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காகச் சாரணர்கள் மற்றும் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையணியினரும் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடல் வழிப் பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி, குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு இடையே பாதுகாப்பான முறையில் தடையின்றிச் சேவையாற்ற 42 பயணிகள் படகுகள் இம்முறை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், யாழ். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிகாட்டுவான் ஜெட்டி வரை பயணிப்பதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் விசேட போக்குவரத்துச் சேவைகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளன.
அம்மனைத் தரிசிக்க வரும் பக்தர்களின் அடிப்படைத் தேவைகளான சுத்தமான குடிநீர் விநியோகம், நடமாடும் வைத்திய சேவைகள், சுகாதார வசதிகள், தடையற்ற மின்சார விநியோகம் மற்றும் அவசர அம்புலன்ஸ் சேவைகள் என்பனவும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் முழுமையாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



