மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கங்களைக் கண்டறிந்து, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று (04) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, எதிர்கால சவால்களை அனைவரும் ஒன்றிணைந்து கூட்டுப் பொறுப்புடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், கையிருப்புகளைச் சரியாக முகாமைத்துவம் செய்தல், சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, முதலீடு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகளால் உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
தற்போதைய நிலையில் எரிபொருள் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், எதிர்கால இடர்களைக் கருத்தில் கொண்டு மேலதிக கையிருப்புகளைப் பராமரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. அதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்துமாறும், ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு ஊடாக வருவதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று விமானப் போக்குவரத்து வழிமுறைகளை ஆராயுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். இக்கட்டான இந்தச் சூழலிலும் முதலீட்டுத் துறையில் கிடைக்கக்கூடிய புதிய வாய்ப்புகளை அடையாளம் காணுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

