வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 109-வது ‘பொன் அணிகளின் போர்’ (Battle of the Golds) பெருஞ்சமர் சமநிலையில் (Draw) நிறைவடைந்தது.
வட்டுக்கோட்டை மைதானத்தில் கடந்த 12-ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணக் கல்லூரி 176 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பாடிய புனித பத்திரிசியார் கல்லூரி தனது முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்களைக் குவித்தது.
49 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி, 9 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதனைத் தொடர்ந்து 198 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய புனித பத்திரிசியார் கல்லூரி, ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
யாழ்ப்பாணக் கல்லூரியின் எஸ்.கே. ஹமிஸ் ஹர்மிஷன் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். இதுவரை நடைபெற்ற 109 மோதல்களில் புனித பத்திரிசியார் கல்லூரி 35 வெற்றிகளையும், யாழ்ப்பாணக் கல்லூரி 17 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

