ஈரானுடனான போர் பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், “ஈரான் முன் எப்போதும் கண்டிராத வகையிலான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும்” என வெள்ளை மாளிகை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான மோதலை நிறுத்த 15 நிபந்தனைகள் அடங்கிய போர்நிறுத்த முன்மொழிவை வெளியிட்டிருந்தார். இந்த நிபந்தனைகளை ஈரான் முழுமையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
எனினும், அமெரிக்காவின் இந்த முன்மொழிவுகளை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சி முற்றாக நிராகரித்துள்ளார். “அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடும் எண்ணம் ஈரானுக்கு இல்லை” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குப் பதிலாக ஈரான் தரப்பில் 5 முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் போர்ச் சேதங்களுக்கான இழப்பீடு வழங்குவதும் ஒரு முக்கிய கோரிக்கையாகும். “மத்திய கிழக்கில் நிலவுவது அமெரிக்காவின் போரோ அல்லது ஈரானின் போரோ அல்ல, மாறாக இஸ்ரேலின் தேவைக்காகவே அமெரிக்கா செயற்படுகிறது” என அப்பாஸ் அரகச்சி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவினால் ஈரானை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என்றும், அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் விட்டுக்கொடுக்காத நிலையில், மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் ஒரு பாரிய போர் வெடிக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

