“செங்கோலைத் தூக்கி ஓடினாலும் சரி, விழுங்கினாலும் சரி.. வழக்குகள், தீர்ப்புகளின் வேகம் குறையாது!” நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி முழக்கம்!
செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும் சரி, அதை விழுங்கினாலும் சரி, வழக்குகள் விசாரிக்கப்படும் வேகமும் குறையாது, தீர்ப்புகள் வழங்கப்படும் வேகமும் குறையாது என்று நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதை விட இந்த அரசாங்கத்திற்கு முக்கிய கடமை வேறு எதுவும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும்போதே நீதியமைச்சர் இவ்வாறு ஆக்ரோஷமாகத் தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “எதிர்க்கட்சியினர் இப்போது பயத்தாலும் பீதியாலும் நடுங்கி சத்தம் போடுவது சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக அல்ல. மாறாகத் தற்போது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளை எப்படி நிறுத்துவது என்ற நோக்கிலேயே இவர்கள் கூச்சலிடுகிறார்கள். இதனால், தங்களால் இயன்ற அனைத்து சேறு பூசல்களையும் செய்கிறார்கள். இன்று பாராளுமன்றத்துக்குள்ளும் நாம் இதனைப் பார்த்தோம். நாம் மாற்ற நினைக்கும், மாறாத இந்த பழைய பாராளுமன்ற அரசியல் கலாசாரத்தையே இந்த எதிர்க்கட்சி தற்போதும் பிரதிபலிக்கிறது” என்றார்.
இன்று நாடாளுமன்றத்தில் செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடப் பார்த்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அமைச்சர், “எனக்குச் சொல்ல ஒன்றுதான் இருக்கிறது. நீங்கள் செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும் சரி, அதை விழுங்கினாலும் சரி, வழக்குகள் விசாரிக்கப்படும் வேகமும் குறையாது, தீர்ப்புகள் வழங்கப்படும் வேகமும் குறையாது” என எச்சரித்தார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிக்கப்படுகிறதா என்பது குறித்து சபையில் விளக்கிய நீதியமைச்சர், “ஆம், அதுகுறித்த கலந்துரையாடல் தற்போது நடைபெறுகிறது. இறுதி முடிவை எடுத்து, நாம் அதுகுறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். அதேபோல், இது ஒரு தனிப்பட்ட நீதிபதிக்கான வயது நீடிப்பு அல்ல, ஒட்டுமொத்த நீதித்துறை சமூகத்திற்குமான மாற்றத்தையே நாம் செய்யவுள்ளோம். அதனால், அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். தேவையான நேரத்தில் அதற்குரிய விவரங்களை நாம் பாராளுமன்றத்துக்குள் அறிவிப்போம்” எனக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கொள்கை குறித்து மேலும் விளக்கிய அவர், “சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதை விட இந்த அரசாங்கத்திற்கு முக்கிய கடமை வேறு எதுவும் இல்லை. தம்மீதான சட்ட நடவடிக்கைகளால் எதிர்க்கட்சியினருக்குப் பயம் வருவது நியாயமானது, கோபம் வருவது நியாயமானது. ஆனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிறைவேற்ற வேண்டும். யாருடனும் எங்களுக்குத் தனிப்பட்ட பகை எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.



