இலங்கை அரச அதிகாரிகளுக்கு ஜப்பானில் உயர் கல்வி வாய்ப்பு! ரூ. 575 மில்லியன் நிதியுதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் உடன்பாடு; ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை அரச சேவையில் பணியாற்றும் இளம் அதிகாரிகளின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டிற்கான விசேட உயர் கல்விப் புலமைப்பரிசில் திட்டத்திற்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
இலங்கை அரச அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக 2010 ஆம் ஆண்டு முதல் ஜப்பான் அரசாங்கம் தொடர்ச்சியாக உதவி வழங்கி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, 2026 ஆம் ஆண்டிற்காக 282 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ. 575 மில்லியன்) நிதியை ஜப்பான் வழங்க உடன்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியின் மூலம், ஆண்டுதோறும் தகுதிபெறும் 15 அரச அதிகாரிகளுக்கு ஜப்பானில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் முதுகலை (Master’s Degree) மற்றும் கலாநிதிப் (Ph.D.) பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்கான அரிய வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
இதற்கான இருதரப்பு உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த விசேட யோசனைக்கு அமைச்சரவை அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் இலங்கை அரச சேவையின் தரம் மற்றும் நிர்வாகத் திறன் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


