சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவி மற்றும் அனைத்துப் பதவிகளும் உடனடியாக இடைநிறுத்தம்! ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி நடவடிக்கை!
இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹோரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியை உடனடியாக இடைநிறுத்த அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ விவகாரத்தில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சரித் அபேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இதுவரை வகித்து வந்த அனைத்து உத்தியோகபூர்வ பதவிகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தவும் கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள்
சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள காலப்பகுதி குறித்து முக்கிய விபரமொன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊழல் குற்றச்சாட்டு கூறப்படும் 2023 ஆம் ஆண்டளவில், சரித் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவோ அல்லது தொகுதி அமைப்பாளராகவோ செயற்படவில்லை என்றும், அக்காலப்பகுதியில் அவர் கட்சியின் எந்தவொரு பதவியையும் வகித்திருக்கவில்லை என்றும் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.



