ரூ. 55 மில்லியன் நிதியுதவியுடன் புதுப்பொலிவு பெறும் பம்பலப்பிட்டி ரயில் நிலையம்! அரச – தனியார் கூட்டுப் பங்களிப்பில் பணிகள் தீவிரம்!
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் புனரமைப்புப் பணிகள் தற்போது மிக அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலங்கையைத் தூய்மையாகவும் அழகாகவும் மாற்றும் நோக்கில் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகவே இந்த பம்பலப்பிட்டி ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுமார் 55 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான கூட்டுப் பங்களிப்பின் (Public-Private Partnership) கீழ் செயல்படுத்தப்படுகிறது. தினசரி பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்களினதும், உத்தியோகஸ்தர்களினதும் வசதிகளை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.
தற்போது அதிவேகமாக நடைபெற்று வரும் இப்பணிகளின் கீழ், ரயில் நிலையக் கட்டடப் புனரமைப்பு, பயணிகளுக்கான நவீன வசதிகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் என்பன சர்வதேச தரத்திற்கு இணங்க புதுப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




